இந்த நாள் எப்போ வருமோ
என்று தான் காத்திருந்தேன்
இன்று
வீட்டில் அம்மா இல்லை
விருப்பம் போல
மட்டைப்பந்து
விளையாடலாம்
யோசிக்கும்போதே
ஆனந்தம் ஒட்டிக்கொள்கிறது
பக்கத்துக்கு வீட்டிலிருக்கும்
என் நண்பனையும்
அழைத்தேன்
ஒரு அணி தேர்வு செய்து
டாஸ் போடப்பட்டது
அதிர்ஷ்டமான நாள்
நான் வென்றேன்
முதலில்
நாங்கள் விளையாடுவதாய்
தேர்வு செய்து
நானே முதலில் இறங்குவதாய்
முடிவு செய்தேன்
எவ்வளவு நாட்கள்
ஆயிற்று விளையாடி
இந்த அம்மா ஏனோ
என்னை விளையாடவே
விடமாட்டேன்கிறாள்
சரி
மட்டையை பிடித்து
நிற்க
எதிரணியின் பந்துவீச்சாளர்
ஓடி வருகிறார் முதல் பந்தை எறிய
விளையாடி ரொம்ப
நாட்களாகிவிட்டதால்
கைகள் நடுங்கியது
ரன் அடிக்கமுடியவில்லை
சுற்றமும் என்னையே
பார்ப்பதாய்
உணர்ந்தேன்
ஐந்து பந்தும்
வீணடித்தேன்
கடைசி பந்து
வேகமாய் எறியபட்ட பந்து
என்னைநோக்கி வர
மட்டையை சுழற்றினேன்
பந்து மேலே சென்றது
4 ஆ 6 ஆ
இல்லை
எல்லை கோட்டை
நெருங்கும் நேரம்
பிடித்து விடுவானோ
குழப்பத்தில் இருக்க
முதுகில் "டப் " என்று
ஒரு அடி
பின்னால் திரும்பினால்
நிற்பது
என் அம்மா
" டேய் எத்தனை முறை
சொல்லிருக்கேன்
என் தொலைபேசி எடுத்து
விளையாடாதே என்று"
நீயாவது புத்திமதி சொல்லக்கூடாதா
உன் நண்பனுக்கு என்று
நண்பனுக்கும் சேர்ந்தே கிடைத்தது
என் அம்மாவின் திட்டு
இனி எப்போ வருமோ
இது போல ஒரு நாள்
காத்திருக்கிறேன்

No comments:
Post a Comment