Saturday, December 13, 2025

அவன்

 எதிர்பாராத ஒரு வேளையில்

என் உயிரின் பாதியாய் வந்தவனே

அறியவில்லை — நீ இவ்வளவு
பிரியமானவனாகி விடுவாய் என்று

அறியவில்லை — நீ என் உயிராய்
மாறிவிடுவாய் என்று

அறியவில்லை —  என் ரகசியம் எல்லாம்
உன்னுடன் பகிர்ந்திடுவேன் என்று

அறியவில்லை — நான்
நீயாகி விடுவேன் என்று

ஆனால் ஒன்றுமட்டும்  தெரியும் —
உண்மையில் நான் இன்று
முழுமையல்ல
நீயில்லாமல்

பாதி நிலா என்று
முழுமதி ஆகுமோ
நானறியேன்

உன்னிடமிருந்து அழைப்பு நின்றபோது
சிந்தனையில் ஒரு கடல்
இரைச்சல் கொள்கிறது

கண்களில்
ஒரு மழைக்காலம் இல்லாமல்
பொழிகிறது
கண்ணீர்

இதயத்தில்
ஒரு நிலச்சரிவு
வெடித்து சிதறுகிறது

உடலிலோ
ஒரு எரிமலை
நின்று எரிகிறது.

மழை நின்ற போதும்
மண்ணில் ஈரத்தன்மை
மாறிவிடுகிறது
ஆனால்
இந்த மனமோ
அதன் சூட்சுமத்தை
உள்வாங்கிக்கொள்ள மறுக்கிறது

நேசித்தவர்கள் போலி எனினும்
அப்படியே வாழ்க்கை மீண்டும்
திரும்பி நடக்கத் தொடங்கும்.
அப்பொழுது பூமி
வழக்கம்போலச் சுழலும்

வளர்பிறையில்
மீண்டும் வளரும்
நிலா
ஆனால்
என் வாழ்வு
யாரறிவாரோ
அவனன்றி

No comments: