Thursday, December 20, 2018

மன்னிப்பு!

மன்னிப்பு
யாரிடம் கேட்பது ?

எட்டி எட்டி உதைத்து
பல பல நாள் அவள்
தூக்கம் கெடுத்தும், பின்
உடல் கிழித்து
வெளியில் வந்தும்,
இன்னல்கள் பல தந்தும்
என் பசி, என் நலம்
என மட்டும் சிந்தித்திருக்கும்
தாயிடமா ?

தான் காணா உலகத்தை
தோள் மேல் வைத்து
எனக்கு காட்டி
தான் சிறுவயதில் பட்ட
இன்னல்கள் எல்லாம்
தன்  மகன் காணாதிருக்க
தன் சுகத்தை மறைத்து
உழைக்கும்
தந்தையிடமா ?

வகுப்பு அறையில்
ஜன்னலோரம் பார்த்து
விளையாட்டாய்
நாட்களை கடத்தியும்
அணைத்து பிள்ளைக்கும்
தன் பிள்ளைபோல்
பாடம் நடத்திய
ஆசிரியர்கா ?

பார்த்த மாத்திரத்தில்
பிடித்தது என சொல்லி
தாலி வாங்கி
எனக்கு பிடித்ததை
தனக்கு பிடித்ததாய் மாற்றி
சுகம் துக்கம் கலந்து
எனக்குள் சரிபாதி
கலந்திட்ட என்
துணைவியிடமா ?

நட்பெனும் வட்டத்தில்
சில வஞ்சகர்களை
நட்பென்று ஏமாந்ததால்
பின் நட்பென்று
வருபவர்களை கண்டால்
சஞ்சலத்தில்
சந்தேக கண்கொண்டு கண்டு
விலகிய நட்பிடமா ?

சாலையில் யாரோ
தவறவிட்டு சென்ற
காகிதம் 
வண்டியின் சக்கரத்திலும்
நடப்போர் கால்பாதத்திலும்
பட்டு கிழிந்தும்
மழை வர நனைந்து
மக்கி மண்ணில் மறைந்து
போவது போல

உணர்ந்தேன்
எவரையும் அவர் அவர்
இயல்பில் ஏற்றுக்கொள்ளுதலே
வாழ்க்கை
உணர்த்தும் பாடம் என

No comments: