Monday, October 12, 2020

ஒரு விதி செய்வோம்

 போர்க்களத்திலே

எதிரிகள் சூழ்ந்திருக்க 

நெஞ்சிலே வீரம் கொண்டு 

கையில் வாளும், வில்லும் அம்பும் ,

ஈட்டியும் ஏந்தி 

பகைவர்களின் தலைகளை 

பகடைகளாய் வீழ்த்தி 

நிமிர்ந்து நின்ற 

என் குல பெண்கள்


சினமுற்றாள்  

விரட்டினாள் 

புலியை கூட

முறத்தால் 

என் வீர தமிழ்பெண் 

அன்று 

 

இன்று 

கையில் வாளும் இல்லை 

ஈட்டியும் இல்லை 

எதிரிகள் மட்டும் 

கண்முன்னே

பற்பல 

முகங்களில் 

உன்னை சூழ்ந்து 

நடமாடிக்கொண்டிருக்கிறார்கள் 


கள்ளிப்பால் முதல் 

கணினி வரை 

உன்னை வீழ்த்த 

திட்டங்கள் தான் 

எத்தனை எத்தனை ..


சிலருக்கு 

வாழ்க்கையில் 

போராட்டம் 

உனக்கோ 

வாழ்க்கையே 

போராட்டமாய்


பாரத மாதா 

பூமி தாய் 

தமிழ் தாய் 

காவேரி,கங்கை என 

பெண்ணை போற்றி வணங்கி 

புத்தகத்தில் புதைத்துவிட்டோம்  


நீதி தேவதையின் 

கண்ணை கட்டிவிட்டோம் 

கயவர்கள் தப்பித்து 

எழுத கூட கூசும் 

ஈன செயலை செய்தவனுக்கு 

தையல் இயந்திரம் வாங்கவா?


பெண்ணே 

நிமிர்ந்து நின்று 

எதிரிகளை வீழ்த்த 

சினம் கொண்டு 

எழுந்து வா 


பெண்ணே 

உனக்காய் 

ஒரு விதி செய்வோம்  

No comments: