Sunday, December 10, 2017

முதிர்கன்னி

எல்லோர் போலவும் தான் நான் பிறந்தேன்
தாயின் வயிற்றில் பத்து மாதம் கிடந்தது

அவளை அதிகம் துன்புறுத்தாமல் சுகமாய்
சுகபிரசவமாய் தான் பிறந்தேன்

தம்பியுடனும், தங்கையுடனும்
சிரித்து , பேசி, படித்து , விளையாடி
சின்ன சின்ன சண்டைகளிட்டு
கழிந்தது என் சிறுவயது பருவம்

கன்னி வயதை எட்டியவுடன்
எனக்குள்ளும் பட்டாம்பூச்சிகள்
பறந்தது,

காதலன் குதிரை மீதமர்ந்து
என்னை கவர்ந்து செல்வதாய்
கனவும் வந்தது

கல்லூரியில் என்னுடன் அன்பாய் பழகியவன்
காதலிப்பதாய் சொன்னவுடன்  வெட்கி
தலைகுனிந்து வீட்டுக்குஓடி வந்தேன்

என் நாணம் எல்லாம் என் தலையணை அறியும்

அவனுடன் பேசி பேசி கதைகள் அனைத்தும்
தீர்ந்ததோ நானறியேன்

பேச்சை நிறுத்திவிட்டான்  என் கல்லூரி காதல்
கானல் நீர் போல ஆனது

பெண் பார்க்க தொடங்கும் நேரம் என்
கண்களில் கண்ணீரும் வற்றியிருந்தது

பெற்றோர்  சொல்லும் மாப்பிள்ளை
வந்து கரம் பிடிக்க காத்திருந்தேன்

பெண் பார்க்க வர சொன்னேன் பிடித்ததாய் வரன் சொல்ல
நாணம் வர மறுத்தது
சென்றவர்கள் தோஷம் ஒன்றுண்டு என்று சொல்ல போக
பிடித்தவளும் பிடிக்காமல் போன மர்மமென்னவோ நானறியேன்

தடங்கல்கள் பல வந்ததும் தங்கைக்கும் தடையாவேனோ ?!
என எண்ணி அவளுக்கு மணமுடிக்கப்பட்டது

அக்கா என அழைத்தவனும் வாழ்க்கையை எனக்காக
தொலைப்பது நியாயமாகுமோ ?! மணமுடிந்தது அவனுக்கும்

என்னதான் சுகபிரசவத்தில் பெற்றாலும்
என் தாயின் வாழ்வில் என் நினைப்பில் நோயுற்றாள்

எப்போது எப்போது அவன் வருவானோ
என காத்திருக்க  எட்டி பாத்தது
காதோரம் நரை

பெட்றோர் மனம்வாட ,உற்றோர் வசைபாட
விருந்துக்கும் வர வேண்டாம் என ஒதுக்க
நான் செய்த பாவமென்னவோ ?

ராமன் வர வேண்டவில்லை
ராவணன் வந்தால் மறுப்பில்லை

பற்றி எரியும் ஆசைகளில் நீர் ஊற்றி
கொண்டிருக்கிறேன்

தாலி யில் என் பேர் எழுத மறந்தவன்
யாரோ !?

சுகமாய் பிறந்தவள் வாழ்வின் சுகம்
மறந்து காத்திருக்கிறேன்

No comments: