Wednesday, November 21, 2018

பிரிவு



பிரிவு
வாழ்க்கையில்
விரும்பாவிடினும் வரும் ஒரு 
நிகழ்வு 

வாலிபனானதும் பிரிகிறோம் 
நம் குழந்தை பருவத்தை 

கல்லூரிக்கு சென்றதும் 
பிரிகிறோம் 
நம் பள்ளிநாட்களை 

வேலைக்கு  சென்றதும் 
பிரிக்கிறோம் 
நம் கல்லூரி நாட்களை 

கல்யாணம் ஆனதும் 
பிரிகிறோம் 
சில நட்பு வட்டத்தை 

வயோதிகரானதும் 
பிரிகிறோம் 
நம் வாலிப பருவத்தை 

பிரிவு 
ஒரு நல்ல அத்தியாயத்தின் 
தொடக்கம் எனில் 
பிரிவை நேசிப்போம் 



Saturday, November 10, 2018



முதல் நாள் பாரத்தோம் அன்றே அறிமுகம் ஆனோம்..!

இரண்டாம் நாள் அன்பில் கலந்தோம்..!


மூன்றாம் நாள் முழுதும் புரிந்தோம்..!


நாளுக்கு நாள் கதைகள் பேசி.!


கேலியிலே பொழுதை கழித்தோம்..!


கிண்டல் செய்து சீன்டி பார்ப்போம்..!


அடிக்கடி சண்டை வரும்..!

ஆனால் பேசாமல் ஒரு நாள் கடந்தது இல்லை !


வாரம் முழுவதும் அலுவலக வேலை 
ஓர் நாள் உன்னுடன் வீட்டிலிருக்க ஆசை  எனக்கு !

வாரம் முழுவதும் வீட்டு  வேலை 
ஓர் நாள் என்னுடன்  இவ்வுலகை ரசிக்க ஆசை உனக்கு !

சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் விளையாட்டாய் 
கடந்தது  நம் காதல் முன் !

மாலை மட்டும் மாற்றி கொள்ளவில்லை



நம் சுகம் துக்கம் இரண்டையும் தான் மாற்றி கொண்டோம்

நதியில் விழுந்த இலையும் காதலில் விழுந்த மனமும்
ஒன்றுதான் , இரண்டும் தத்தளித்துக் காெண்டே இருக்கும் கரை சேரும் வரை.

எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல!! சிறிய சிறிய சந்தோஷங்களையும் ரசித்துக் கொண்டு வாழ்வதே வாழ்க்கை...!!

நாம் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்
என் விரல்களின் இடைவெளி உன் விரல்கள் கோர்க்க
காத்திருக்கிறது அன்பே வா!

நா முத்துக்குமார்



எனக்கொரு கவலை 
இருந்தது கண்ணதாசன் வாழ்ந்த 
நாட்களில் நானில்லயே என்று 

இயல்பான வரிகளில் இதயத்தை 
தொடமுடிந்தவன் யார் என எண்ணுகையில் 
ஓர் நாள் காதில் ஒலித்தது ஒரு பாடல் 

"எனக்குப்பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குமே"
பிடித்து தான் போனது பாடல் வரிகள் 

"நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்"

உன் பாடல்கள் கேட்டபின் என் மன நிலையும் இது தான் 

"நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் 
வருவேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் "

பல வருடங்களுக்கு என் தொலைபேசியை 
அழைத்தால் இந்த பாடல் தான் ஒலித்தன 
இதற்காகவே அழைத்தவர்களும் ஏராளம் 

"அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் 
நமது கதையை காலமும் சொல்லும்"
சொல்லிக்கொண்டு தான் இருக்கும் உன் புகழ் 
காலம் உள்ளவரை நண்பா 


"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை"

என்று கேட்டாலும் என் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க வைக்கும் 
ஒரு பாடல் உண்டெனில் அது இது தான் என் தந்தையின் 
தியாகம் கண்முன் நிழலாடும் 

பெற்ற பிள்ளைக்காக "ஆனந்த யாழை மீட்டி எங்கள் நெஞ்சில்
வண்ணம் தீட்டினாய்"
இந்த மண்ணில் இதுபோல் யாரும் வாழ்ந்ததில்லை 
என யோசிக்க வாய்த்த பாடல் வரிகள் 

உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை  ஒன்னும் இல்லை

தெய்வங்கள் எல்லாம் தோற்று தான் போனது 
உன் உயிரை சீக்கிரம் எடுத்து 

ஒரு வண்ணத்து பூச்சி என் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் என் விரலோடு உள்ளது


கண்ணதாசனுக்கு பிறகு எனக்கொரு நா முத்துக்குமார்
என் பிள்ளைக்கு யார் ? விடைதெரியா கேள்வியில் நான்


வாழவிடு ...





இதோ கொடிய இரவின் மடியில்
எறிந்துகொண்டிருக்கிறது
என் உடன்பிறவா சகோதர சகோதரிகளின்
உடல்

ஆணவத்தில் ஆடும் ஒரு சில
அதிகாரவர்க்கத்தின் அட்டூழியம்
அடக்கத்தான் யாருமில்லை

பூக்கள் சூழ்ந்து மனம் வீசிக்கொண்டிருந்த
எங்கள் தோட்டம் இன்று பிணவாடையில்
குளித்துக்கொண்டிருக்கிறது

பல நாள் ஊண் உறக்கமின்றி
எங்கள் மண் மேலே,
சிறுக சிறுக சேமித்து ஆசையாய்
என் தந்தை எங்களுக்காய்
கட்டிய வீட்டினுள் வசிக்க முடியாமல்
மண் தோண்டி மண்ணுக்கடியில்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்

இங்கு
குழந்தைகளுக்கு விளையாட
எரியாமல் போன உறவுகளின்
கை கால்கள் மட்டும் மிச்சம்

இது விஞ்ஞானத்தின் வளர்ச்சியா ?
மானங்கெட்ட சில மனிதர்களின் 
சூழ்ச்சியா ?

இயற்கையை அழித்து 

விவசாயத்தை அழித்து 
மனிதர்களை அழித்து 
பிணத்தையா தின்ன போகிறீர்கள் ?!

பச்சிளம் குழந்தையும் 

போர் என கொள்ளும் 
மிருகங்களே !?

என் உறவுகளில் 

குண்டுகள் பாய்ந்தபோதும் 
உன் குருதியின் வண்ணம்தனை 
காணவில்லையோ ?

எப்பொழுதேனும் பறக்கும்
விமானத்தை அதிசயமாய்
அண்ணாந்து பார்த்த காலம்போய்

இன்று
அனுதினமும் வீட்டின்மேல்
பறக்கும் போர்விமானத்தை
அச்சத்துடன் பார்க்கிறோம்
என்று எங்கள் மேல் குண்டுகளை
பாய்ச்சுமோ என..

குமுறல்களை முறையிட
கோவிலுக்கு சென்றால்
சிலையை காணவில்லை
தேவாலயத்தில் இருந்தவரையும்
சிலுவையில் அறைந்துவிட்டார்கள்
பள்ளிவாசலும் திறக்கப்படாமல் இருக்க 
எங்குதான் செல்ல...

காண்போரிடம் எல்லாம் 

பகிர்ந்து கொள்ள ரணங்கள் 
மட்டும்நிரம்பிய  எங்கள் உள்ளம் 

என் தாய்நாடு உயிரினும் பெரிதென்று 

வேறெங்கும் ஓடாமல் 
தாய்மண்ணின் ம(அ)டியில் 
மரணம் தழுவும் வரை வாழுவோம் 

உன் குருதி தாகம் தீருமாயின்

கொஞ்சம் எங்களையும்
வாழவிடு ...

சுற்றிகொண்டிருக்கிறேன்


சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்
என்னை சுற்றிக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளிலிருந்து மீள
வழி தெரியாமல்


சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்
நாம் சென்ற இடமெல்லாம்
வியாபித்திருக்கும்
உன் நினைவுகளை
அழிக்க முடியாமல்

சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்
என்னை நீ பிரிந்த காரணத்தை
கண்டறிய முடியாமல்

சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்
தனியாக சிரிப்பதற்கும்
தனியாக அழுவதற்கும்
தனியாக பேசுவதற்கும்
தனியாக வாழ்வதற்கும்
பழக்கபடுத்திக்கொண்டிருக்கும்
என்னை பைத்தியம் என்பவர்களுக்கு
என்ன பதில் சொல்வது என
தெரியாமல்

சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்
நிலவும் சூரியனும் ஓர் நாள்
சந்தித்து கொள்ளலாம்
நீயும் நானும் என்று சந்திப்போம்
என தெரியாமல்
சுற்றி சுற்றிகொண்டிருக்கிறேன்


என் காதல்



பலநாள் இரவில் என் தூக்கத்தை
ஆக்ரமித்தவள் நீயே

என் காதலை சொல்ல எத்தனித்து
வார்த்தை வர மறுத்து என்னை நானே
வெறுத்த நாட்கள் ஏராளம்

காதல் சொல்ல வாங்கிய மலர் கூட
மனம் மாறி மணம் வீச தவறலாம்
ஆனால் என் காதல் என்றும் மாறாதே

என் மௌனம் சொல்லாத காதலை
என் வார்த்தைகள் தான் சொல்லிடுமோ

ஓயாமல் ஆர்ப்பரிக்கும் அலைகடல்
போன்றதல்ல என் காதல்
பொக்கிஷம் பல உடன் இருந்தும்
அமைதியாய் இருக்கும் நடுக்கடல் போல
என் காதல்

தொலைபேசி அழைப்பு ஒலிக்கும் போதெல்லாம்
உன் முகம் வந்து வந்து போகிறது

அரட்டை அரங்கத்தில் ஓசை இல்லா பல குரல் கேட்பினும்
உன்னிடம் இருந்து வரும் ஒரு குறுந்செய்திக்கு
காத்திருப்பதே சுகமாகி போனதெனுக்கு

என் இதயத்தை உன்னிடம் கொடுத்துவிட்டேன்
அன்பே என்று நீ
என் இதயத்தில் இருப்பதை என்று நீ அறிவாயோ ?!

என் காதல் அது நீ உணரும் வரை
சுகமான வலி மட்டும் மிச்சம் !

வண்ணமல்ல இது !



பாரத தாய்
அவளிடம்  இன்று
புதியதாய் ஒரு வண்ணம்
கண்டேன்

இவ்வண்ணம்
வறுமையின்
வண்ணமல்ல

மங்கை அவள்
நெற்றியை
அலங்கரித்த
வண்ணமுமல்ல

கன்னி அவள்
கைகளை
மருதாணியிட்டு
வரவைத்த
வண்ணமல்ல

பிறந்ததும்
தொப்புள்கொடி
வெட்டியதும்
வந்த வண்ணமல்ல

பெண் குழந்தை
என தெரிந்தும்
கள்ளிப்பால்
கொடுக்காமல்
வளர்த்தெடுத்த
பெற்றோரின்
மனது விரும்பிய
வண்ணமல்ல

கணவனை
தெய்வம் என கொண்டு
அவன் இறந்தால் உடன் கட்டை
ஏறியதும் வந்த வண்ணமல்ல

இது
அபாயத்தின்
வண்ணம்

பிஞ்சு உடலை
பஞ்சு என கொண்டு
பிய்த்தெறிந்ததும்
தெளித்த குருதியின்
வண்ணம் இது

இது வண்ணம் என
கொண்டாடும்
பேதைகளின்
வன்மம்
எதை கொண்டு இதை
களைய போகிறோம்

கள்ளிப்பாலுக்கு
இரையாக்க நினைத்தீர்
தப்பித்தாள்
உன் சாதிக்கு இரையாக்க
பார்த்தீர்
தப்பித்தாள்
உன்னை மாய காதல் வலையில்
இரையாக்க நினைத்தீர்
தப்பித்தாள்
உடன்கட்டை ஏற்ற  நினைத்தீர்
தப்பித்தாள்

தப்பி பிறந்தவள்
வாழ்வதே தப்பு தானோ ?

யார் இதற்கு காரணம்
சட்டமா ? இந்த நாடா ?
இல்லை இந்த நாட்டின்
அரசியல்வாதியா ?

இல்லை
மாற்றம் உருவாக
வேண்டும்
மக்களாகிய
நம்மிடமிருந்து

பெண்மையை போற்றுவோம்
தாயை போற்றுவோம்
தாய் நாட்டை போற்றுவோம்


பெண்



பெண்னை ஒரு தெய்வமாக வணங்கும் நாடே
பெண்ணை ஓட ஓட துரத்துகிறதே .

அன்று  பெண்களை போற்றிய கைகள்
இன்று  ஆனதேனோ அவளை சூறையாடும்  கைதிகள் 

உயிரை படைக்கும் சக்தி பெண்ணிடமே உள்ளது 
அவளை அழித்தால் அழியும் உலகு முடிவு உன்னிடமே உள்ளது 

அன்புக்கு இலக்கணம் அம்மா
அவள் அன்பையே இழிவாக்குவது தகுமா

அச்சத்தின் விளிம்பில் இருக்கிறாள் பெண் 
அவளை காப்பாற்ற வேண்டிய நாடோ சதியின் பின்

வீதியில் காலடி எடுத்துவைக்க தயங்குகிறாள் 
அவள் வாழ்க்கையின் பயத்தை எண்ணி 

சுதந்திரமான குடிமக்கள் இருக்கும் நாட்டிலே 
சுதந்திரம் இல்லையே பெண்களுக்கே

பெண் என்பவள் நாட்டின் கண் 
அவளை இழிவு படுத்தினால் 
நம் வாழ்க்கை மண் 



செவிலியர்


பெற்றெடுத்து உன்னை
அன்பாய் பார்த்துக்கொள்பவள்
தாய்
தான் பார்ப்பவர்கள் எல்லாரையும்
பெற்றெடுத்த தாயின் பாசத்தோடு
அரவணைப்பவர்கள்
செவிலியர்கள்

புனிதமானவள் என்று
தாயை சொல்வோம்
புனித பணியை
தினமும் செய்பவள்
செவிலி

பிணி வந்த நேரத்தில்
வீட்டில் இருப்பவரே
முகம் சுளிக்கும் இக்காலத்தில்
முகம் மலர்ந்து
பணிவிடை செய்ய
ஓடி வருபவள் இவள்

அறுவை சிகிச்சை ஆயினும்
ஆறாத நோயாயினும்
உடன் இருப்பவர்களுக்கு
ஆறுதலாய் இவள்
இருப்பாள்

மருத்துவம் தான்
கணினி துணை கொண்டு
பலமடங்கு வளர்ந்தாலும்
செவிலி இவள் இன்றி
எதுவும் வெற்றி அடையாது

தாய் போல் இவள் நம்மை
அரவணைத்தாலும்
ஏனோ  சகோதரி என்றே
இவளை அழைக்கிறோம்

பொறுமைக்கு நான்
கண்ட உவமை இவள்

நேரம் காலம் பார்க்காது
பொறுப்பாய் புன்னகை சிந்தி
காக்கும் நீயும்
பிணி கொண்ட நேரத்தில்
நான் கண்டா
தெய்வம் தான்
நீதான்

கிறுக்கினேன்

கவிதைகள் படித்தேன் பல
புரிந்தன சில ,
புதிராய் இருந்தன பல
பற்றிக்கொண்டது ஆர்வம்
எழுத சொன்னது மனம்
எழுத நினைத்தேன்
வார்த்தைகள் தேடினேன்
கவிதை எதை பற்றி எழுத ?
தீண்டினேன்
வரவில்லை வரிகள்
உணர்ந்தேன்
என்னுள் கவிஞன்-
இல்லை என்று
இல்லை என்றால்
என்ன உருவாக்கலாம்
என்று செய்தேன்
முயற்சி
கொஞ்சம்
பயிற்சி
தொடங்கினேன்
கிறுக்கினேன்
கவிஞனாய் மாற
செதுக்கினேன்
வார்த்தைகளை


விழித்திடு மனிதா !

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் "
    தமிழ் தாய் வாழ்த்தையும் நீர் கொண்டே தொடங்கினான் 
என் தமிழன் 

வீட்டுக்கு வரும் விருந்தினர் அனைவர்க்கும் தண்ணீர் 
முதலில்  கொடுத்தே உபசரிப்பான் அவன் 

ஆறுகள் அனைத்துக்கும் தான் உயர்வாய் மதிக்கும் 
பெண்ணின் பெயரையே வைத்தான் அவன் 

ஆற்றில் பார்த்தார் உன்னை என் பாட்டன் 
கிணற்றில் பார்த்தார் உன்னை என் அப்பா 
குழாயில் பார்க்கிறேன் உன்னை  நான் 
குப்பியில் பார்க்கிறான் உன்னை என் மகன்
 எங்கு பார்ப்பானோ உன்னை என் பேரன்

வேடிக்கையாய் தெரிந்தாலும் சந்ததியின் 
அவலம் அறைகிறது என் கன்னத்தில் 

தன் உடல் வியர்வை துளியை கூட உரமாக்கி 
விவசாயம் செய்தான் அவன் 

வானுயர கட்டிடங்கள் கட்டிய மனிதன் 
அழகு பார்த்தான் வானுயர்ந்த அழகான மரங்களை வெட்டி 

வெட்டியது மரம் அல்ல தன் சந்ததியின் 
மரண வாசலின் முதல் படி என அறியாமல் 

தவறி பெய்யும் மழையையும் சேர்த்து வைக்க 
தவறி விட்டோம் 

இனி மிஞ்சி இருப்பது என் கண்களின் ஓரத்தில் 
எட்டி பார்க்கும் கண்ணீர் துளியே 

அது வற்றுவதற்குள் விழித்திடு மனிதா !

நீ இல்லா நாளில் !

என் தனிமை பயணம் தொடர்கிறது... ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாய்..... ஒவ்வொரு பொழுதும் சோகமாய்...... நீ இல்லாமையால்...

வெறுத்த ஒருவரையே மறக்கமுடியாதபோது விரும்பிய ஒருவரை எப்படி மறப்பது?

கதறி அழவும் முடியாமல் கண்ணீரை அடக்கவும் முடியாமல் கலங்கியபடி வீதியில் நடக்கிறேன் .

அடுத்தமுறையாவது விசாரித்து பிறக்க வேண்டும்... எந்த ஜென்மத்தில்,, நீ மீண்டும் கிடைப்பாயென்று..!

Friday, November 9, 2018

எனக்கு மட்டும் ஏன் இப்படி ?!

எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?

பேசி பழகிய உறவுகள்
பேச மறந்த நிகழ்வுகள்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?

அன்பு காட்டும் தாய்
அக்கறை காட்டும் தந்தை
அரவணைக்க ஒரு சகோ
இருந்தும் தனிமையாய் உணர
எனக்கு மட்டும்
ஏன்இப்படி?

கணவன் என என்னை கொண்ட மனைவி உண்டு
தந்தை என அழைக்க பிள்ளையும் உண்டு
இருந்தும் தனிமரம் என உணர
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?

சந்தோஷமாய் பேசி ஆனந்த தேன் கூட்டில்
உலா வரும் வேளைகளில் எல்லாம்
உடன் கல்லெறிந்து கலைக்கும் தருணங்கள்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?

என் சோகம் என்னை நேசிப்பவர்களை
காயபடுத்தும் என்று அறிந்தே
விலகி செல்ல முயல்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?

நட்பென்று பழகிய உறவுகள்
முள்ளென்று குத்தும் வேளை
மரணத்தின் விளிம்பில் நிற்பதாய்
உணர்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?

ஆண்மகனாய் பிறந்ததால்
வெளிப்படையாய் அழவும்
திராணி இன்றி உள்ளுக்குள் குமுறுகிறேன்
யாருமே அறியாவண்ணம்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி ?

யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை
நட்பெனும் போர்வையில்
துரோகத்தின் வலையில் பலநாள்
சிக்குண்டு திக்கின்றி கிடந்திருக்கிறேன்
எனக்கு மட்டும்
ஏன் இப்படி?

இறைவா
நான் செய்த தவறை திருத்த
எனக்காக இல்லாவிடினும்
என்னை நேசிக்கும்
சில உறவுகளுக்காக வேணும்
எனக்கொரு ஒரு வாய்ப்பு கொடு